ஜோதிடம் என்பது ஒரு கடல் போன்றது! அதில் மூழ்கி முத்தெடுப்பது என்பது ஒருசிலரால் மட்டுமே முடிந்த செயலாக இருக்கிறது.

Advertisment

பொதுவாக ஜோதிடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எண்ணிக்கை இப்பொழுது அதிகரித்துவருகிறது. இத் தொழில் வழியாக வருமானம் பார்க்கலாம் என்ற எண்ணம் பலருக்கும் வந்து விட்டதால் ஜோதிடம் பற்றி அரை குறையாக தெரிந்துகொண்டு தங்களையும் ஜோதிடர்களாக கூறிக்கொண்டு பலன் சொல்பவர்கள் இப்போது அதிகரித்துள்ளனர்.

Advertisment

இத்தகைய நபர்களை ஜோதிடர்கள் என்று நம்பிக்கொண்டு போய் பலன் கேட்பவர் களுக்கு அவர்கள் கூறிய பலன்கள் நடப்பதில்லை.

இதன்காரணமாக ஜோதிடத்தின்மீதான நம்பிக்கையை அவர்கள் இழக்கின்றனர்.

இதில் தவறு யார் பக்கம்? சரியான ஜோதிடரிடம் செல்லாமல் அரை குறையான நபரிடம் சென்று பலன் கேட்டவரிடம்தானே!

Advertisment

அடுத்து ஒரு தகவல், ஒருவர் பாரம்பரிய ஜோதிட குடும்பத்தில் பிறந்தவர் என்பதற்காக அவருக்கும் ஜாதகம் பற்றி தெரிந்திருக்கும் என்று நம்புவது!

இது யாருடைய தவறு? அத்தகையவரை நம்பியவரின் தவறுதானே?

ஒருவருடைய ஜாதி, குலம், இனத்தின் வழிவழியாக வந்து கொண்டிருப்பவர்களுக்கு ஜாதகம் தெரியும் என்ற நம்பிக்கையை முதலில் அனைவரும் தங்கள் மனதில் இருந்து நீக்கவேண்டும்!

ஒரு குலத்தில் பிறப்பதாலோ அல்லது ஒரு இனத்தில் பிறப்பதாலோ எவராலும் ஜோதிடராகிவிட முடியாது.

ஒருவருடைய ஜாதகத்தில் அந்த அமைப்பு இருக்கவேண்டும், அத்துடன் பலன் கூறுபவர்களுக்கு வாக்கு பலிதமும் இருக்கவேண்டும்.

காரணம், ஜோதிடம் என்பது மந்திரமோ- மாயமோ அல்ல. கிரகங்களின் சஞ்சார நிலைகளை வைத்து கணிப்படும் சாஸ்திரம்.

ஜோதிடம் என்பது ஒருவரின் வாழ்க்கை அவருடைய ஜாதகத்தின் அடிப்படையில் எப்படியிருக்கும் என்பதைக் கண்டுபிடிக்கும் மூலம்.

இந்த உண்மையை உணராமல் தகுதி இல்லாதவர்களையும் ஜோதிடர்கள் என்று நம்பி அவர்களிடம் போய் பலன் கேட்கும் நிலை நம் மக்களிடம் இருக்கிறது.

இதன்காரணமாக, ஜோதிடம் பற்றிய போதுமான அறிவு இல்லாத வேடதாரிகளை ஜோதிடர்கள் என்று நம்பி அவர்களிடம் சென்று பலன் கேட்கின்றபோது அவர்கள் கூறும் பலன்கள் தவறாக இருக்கிறது. எதுவும் நடக்காமல் போகிறது.

இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் ஜோதிடத்தின்மீதான நம்பிக்கை யும் அதிகரித்துவருகிறது.

அதற்கு காரணம் ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதும், கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையினை வைத்து ஒரு மனிதனுடைய வாழ்க்கையை அறியமுடியும் என்ற நிலையினை ஜோதிட சாஸ்திரம் வழங்கியிருப்பதும்தான்.

இந்த நேரத்தில் ஒன்றினை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக, அதை உங்களுக்கு நான் கூறியாக வேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் யோகமான தசாபுக்தி நடக்கும், கோட்சாரரீதியாகவும் அவருக்கு நன்மையான நிலை இருக்கும்.

மேம்போக்காக அந்த ஜாதகத்தைப் பார்க்கும் நம்முடைய டுபாக்கூர் ஜோதிடர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?

நல்ல நேரம் வந்தாச்சு, கூரையைப் பிச்சிக்கிட்டு பணம் கொட்டப் போகுது! வாசலில் ஆடி கார் வந்து நிக்கப்போகுது! வேலைக் கிடைக்கப்போகுது! கல்யாணம் நடக்கப்போகுது! பிள்ளைப் பிறக்கப் போகுது என்று சொல்லி அவர்கள் காசு பார்த்துவிடுவார்கள்.

ஆனால் அவர்கள் சொன்ன எந்தவொரு பலனும் எவருக்கும் நடப்பதில்லை என்பது தான் உண்மை.

சரி, அப்படி என்னதான் ஜோதிட சாஸ்திரத்தில் சூட்சுமங்கள் மறைந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொண்டே ஆக வேண்டும்.

இந்த இடத்தில் ஒருவருடைய பிறப்பு என்பது கர்ம வினையினால் உருவானது என்பதை முதலில் நாம் உணரவேண்டும். 

அத்தகைய கர்ம வினையோடு பிறப்பெடுத்துள்ள நம் ஜாதகத்தில் நிச்சயமாக ஏதாகிலும் ஒரு தோஷம் இருக்கும்! அதேபோல் யோகமும் இருக்கும்! எல்லோருடைய ஜாதகத்திலும் இந்த நிலை நிச்சயமாக இருக்கும்!

ஒரு பக்கம் தோஷம் இருக்கலாம், மறுபக்கம் யோகம் இருக்கலாம்! ஆனால், தோஷம் இல்லாத ஜாதகத்தை நாம் பார்ப்பது அரிதிலும் அரிது மானிடராய் பிறந்தவரிடத்தில் காண்பது அரிது என்றே சொல்லவேண்டும்.

சரி, யோகம் இருப்பவர்கள் அதற்குரிய கிரகங்க ஸ்தலங்களுக்கு சென்று வணங்கி வழிபட்டு வருகின்றபோது அந்த ஆலயத்தினுடைய நேர்மறையான ஆற்றல்... வைப்ரேஷன் அவர்களுக்கு மேலும் யோகத்தை உண்டாக்குகிறது.

அதேபோல், தோஷமுள்ள ஜாதகர்கள் என்ன செய்ய வேண்டும்? அல்லது ஜாதகத்தில் தோஷம் இருக்கிறது என்பதை எப்படித்தான் தெரிந்துகொள்வது? ஜாதகத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையை வைத்து அதைக் கண்டுபிடிக்க முடியுமா என்று நீங்கள் கேட்கலாம்!

ஒருவருடைய ஜாதகத்தைப் பார்த்தே... அந்த ஜாதகத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையை வைத்தே எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முடியும்!

இந்த இடத்தில் நீங்கள் ஒரு கேள்வி கேட்பீர்கள்! 

ஒரேநாளில், ஒரே நேரத்தில் பிறந்த எல்லோருக்கும் அதே போன்றுதானே ஜாதகம் இருக்கும். அப்படி இருக்கும்போது ஒவ்வொருவருக்கும் பலன்கள் ஏன் வேறுபடுகிறது என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம்?

இந்த இடத்தில் உங்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்கிறேன்! 

ஒரேநாளில், ஒரே நேரத்தில் பிறக்கும் எல்லோருக்கும் ஜாதகம் ஒன்றுதானே? ஏன் அவர்கள் எல்லோரும் ஒரேநாளில் இறப்பதில்லை?

உங்கள் கேள்வி அதுவாக இருந்தால் உங்களுக்கு என்னுடைய கேள்வி இதுவாக இருக்கும்.

இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவரும் அவரவர் கர்ம வினைக்கேற்ப யார் யாரிடம் எதை எதை அனுபவிக்க வேண்டுமோ 

அதை அனுபவித்து விட்டுத்தான் வாழ்வை முடிக்க முடியும்!

அது நல்லதாகவும் இருக்கலாம், தீயதாகவும் இருக்கலாம். எல்லாமே அவரவர் கர்மாதான்! கடந்த பிறவியின் மிச்ச சொச்சங்களான அதை நீங்கள் அனுபவித்தே தீரவேண்டும். 

இதன் காரணமாகத்தான் அனைவருக்குமான ஒரு தகவலைச் சொல்வேன்... இங்கே எதுவுமே நீங்கள் அல்ல... உங்களை ஒவ்வொன்றாக செய்யவைப்பதே கர்ம வினைகளும், கிரகங்களின் இயக்கமும்தான்!

கடந்த பிறவிகளில் நீங்கள் எந்த அளவிற்கு நன்மைகளை அதிக பட்சமாக செய்திருக்கிறீர்களோ அந்த அளவிற்கு இந்த பிறவியில் நீங்கள் நன்மைகளை அடையமுடியும்.

அதே நேரத்தில், கடந்த பிறவியில் நிறைய சாபங்களை நீங்கள் வாங்கியிருந்தால் அல்லது உங்கள் பிறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் வாங்கி இருந்தாலும் இப்பிறவியில் அவற்றை தோஷங்களாக பெற்று நீங்கள் அனுபவிக்க வேண்டியதாக இருக்கும்.

சரி, எல்லாவற்றிற்கும் காரணம் கர்ம வினைகள்தான்! நம் கர்மா எத்தகையது என்பதை எப்படி அறிவது? என்ற கேள்விக்குரிய பதில் என்ன தெரியுமா? நம் தலையெழுத்தை சுமந்து வந்திருக்கும் நம் பிறப்பு ஜாதகம்தான்!

நம்முடைய ஜாதகத்தைப் பார்க்கும்போது, அதில் கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையை அறியும்போது நமக்கு எந்த வகையான யோகங்கள் இருக்கிறது! எந்த வகையான தோஷங்கள் இருக்கிறது என்பதை அறியமுடியும்.

இந்த இடத்தில் ஒரு உண்மையை நாம் அனைவரும் உணர வேண்டும்! ஒருவருடைய ஜாதகத்தில் ஏதாகிலும் ஒரு தோஷம் இருந்துவிட்டால் அவருக்கு கிடைக்க வேண்டிய எந்த ஒரு நல்ல பலனும் அவருக்கு கிடைக்காமல் தடைப்படும்! கைக்கு வந்தது வாய்க்கு வரவில்லை என்ற நிலை உருவாகிவிடும்.

ஜாதகத்திலுள்ள ஒவ்வொரு கிரக தோஷத்திற்கும், அந்த தோஷத்திற்குரிய பரிகாரங்களை நாம் செய்துகொள்ளும் அளவிற்கு புராண, இதிகாச காலத்தில் இருந்து சில ஆலயங்கள் இங்கே உள்ளன.

அங்கு சென்று பரிகாரம் செய்து கொள்ளாத வரையில் நம்முடைய வாழ்க்கை திரிசங்கு சொர்க்கமாகத்தான் இருந்துகொண்டிருக்கும்! இதுதான் உண்மை!

சரி, இந்த இடத்தில் இப்பொழுது தோஷங்களில் மிகவும் கடுமையான தோஷம் என்கிற பித்ரு தோஷம் பற்றி பார்ப்போம்...

பித்ரு தோஷம் பற்றி பேசுபவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கணக்குகளை வழங்கிவருகின்றனர்! 

அதையும் நாம் சரியாக பார்க்க வேண்டும்!

பொதுவாக சர்ப்ப கிரகங்களான ராகு- கேதுக்களால்தான் பித்ரு தோஷம் உண்டாகிறது!

ராகுவோ அல்லது கேதுவோ சூரியனுடனோ, சந்திரனுடனோ இணைந் திருந்தால் அந்த ஜாதகருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்!

இதற்கும் மேலாக ஒருசிலர், ஒன்று, ஐந்து, ஏழு, ஒன்பது ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் அவர்களுக்கு பித்ரு தோஷம் என்று கூறுகின்றனர்.

ஒருசிலர், மூன்று, ஐந்து, ஒன்பதாம் இடங்களில் ராகுவோ- கேதுவோ இருந்தால் பித்ரு தோஷம் என்று கூறுகின்றனர்!

இவர்கள் கூறும் தகவலை நாம் சரிபார்க்க வேண்டும்! 

ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னமான ஒன்றாம் இடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால்.... நிச்சயமாக ஏழாம் இடத்தில் மற்றொரு கிரகம்  இருக்கும்!

மூன்றாம் இடத்தில் ராகுவோ- கேதுவோ இருந்தால் மற்றொரு கிரகம் ஒன்பதாமிடத்தில்தான் இருக்கும்!

ஐந்தாம் இடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் பதினொன்றாம் இடத்தில் வேறொரு கிரகம் இருக்கும்!

ராகுவும் கேதுவும் சம சப்தமாக சஞ்சரிப்பவர்கள்!

இப்படி பார்க்கின்றபோது, ஒன்று, மூன்று, ஐந்தாம் இடங்களைப் பார்த்தாலே போதும்!

அதைவைத்து அவர்களுக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்பதை நாம் தீர்மானித்து விடலாம்!

சரி, ஜாதகம் பார்த்தாச்சு! பித்ரு தோஷம் பற்றி தெரிஞ்சாச்சு, அதற்கு என்னதான் தீர்வு?

ஒருசிலர் காசிக்கு போங்க. அப்பதான் தோஷம் போகும்! பலன் கிடைக்கும் என்று சொல்வார்கள்!

இது எப்படியிருக்கிறது என்றால், கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாகத்தான் இருக்கிறது!

இவர்களுக்கு மேலாகவும் ஒரு கோஷ்டி இருக்கிறது! ஏமாற்றிப் பிழைப்பதையே தொழிலாக வைத்துக்கொண்டுள்ள கோஷ்டி அது!  

"உங்க தோஷத்திற்கு நானே பரிகாரம் பண்றேன்னு சொல்லி பணம் பறிப்பவர்கள் இவர்கள்!

இந்த இடத்தில் ஒரு உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்! எந்தவொரு ஜோதிடனும் கடவுள் அல்ல... ஜோதிடன் என்பவன் ஜோதிட சாஸ்திரம் அறிந்த ஒரு கணிதன்... அவ்வளவுதான்! 

அதற்குமேல் அவன் பரிகாரங்கள் செய்யக்கூடிய சக்தி படைத்தவன் அல்ல!

சரி, பித்ரு தோஷத்திற்குரிய பரிகாரத்தை எங்கே சென்று செய்வது? எப்படிச் செய்வது என்றுதானே கேட்கிறீர்கள்?

பித்ரு தோஷத்திற்கென்று தமிழகத்தில் இருக்கின்ற ஒரே ஒரு ஸ்தலம் இராமேஸ்வரத்திலுள்ள இராமநாத சுவாமி ஆலயம் மட்டும்தான்!

பித்ரு தோஷமுள்ளவர்கள் இராமேஸ்வரம் சென்று, அங்குள்ள சிவாச்சாரியார்களை வைத்து பூஜைசெய்து, ஹோமம் வளர்த்து, ஆவர்த்தியால் உருவேற்றி, பூஜையில் செய்த பிண்டத்தை அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் கரைத்து, கடலில் தலை மூழ்கி, அதன்பிறகு ஆலயத்திலுள்ள இருபத்தி இரண்டு தீர்த்தங்களில் நீராட தோஷம் விலகும்! தோஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும்.

அதன்பிறகு தங்கியிருந்த அறைக்கு சென்று உடையை மாற்றிக்கொண்டு இறைவனையும் இறைவியையும் வணங்கி, அனுமனையும் தரிசித்து வணங்கிவர பித்ரு தோஷத்தின் தாக்கம் குறையும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

பித்ரு தோஷத்திற்கு வேறு எந்தவிதமான பரிகாரமும் இல்லை. இராமேஸ்வரம் மட்டும்தான் பரிகார ஸ்தலம். அங்கே போய் பரிகாரம் செய்துவருவதற்கு பிறகுதான் யாருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கிறதோ- அந்த ஜாதகர் வாழ்வில் நடக்கவேண்டிய நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும்.

செல்: 94443 93717